search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை காணலாம்
    X
    கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை காணலாம்

    கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், மணக்குடி கடற்கரை பகுதி போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகையை யொட்டி கன்னியாகுமரியில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை மீண்டும் களை கட்ட தொடங்கியது.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு திரும்பினர்.

    மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல மற்ற சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கடற்கரையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சுனாமி நினைவு பூங்கா உட்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மழையினால் கடந்த 4 நாட்களாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி மற்றும் சூரியன் மறையும் காட்சி நேற்று வெயில் அடித்ததால் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதனை காண கன்னியாகுமரி கடற்கரை மற்றும் சன்செட்பாயிண்ட் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், மணக்குடி கடற்கரை பகுதி போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுற்றுலாத்தலங்களில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


    Next Story
    ×