search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அரசு ஆஸ்பத்திரியில் இன்று தடுப்பூசி போட அதிகாலையிலேயே குவிந்த பொதுமக்கள்.
    X
    சென்னிமலை அரசு ஆஸ்பத்திரியில் இன்று தடுப்பூசி போட அதிகாலையிலேயே குவிந்த பொதுமக்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் 7 நாட்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொதுமக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை.

    ஈரோடு:

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன.

    முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், பின்னர் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொதுமக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை.

    தற்போது கொரோனா 2-ம் அலையால் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

    இதனால் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கும், 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த 7 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசி அனைத்தும் அந்தந்த ஆரம்ப சுகாதார மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று முதல் 42 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த இடங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். அதிகாலை முதலே 500-க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் திரண்டனர். இதில் ஒவ்வொரு மையங்களிலும் தலா 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து டோக்கன் பெறுவதற்காக அதிகாலை 3.30 மணி முதல் ஆஸ்பத்திரி முன்பு 400-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

    காலை 6 மணி அளவில் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட டோக்கன் வழங்கப்பட்டது. மற்றவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோல் சென்னிமலை அருகே பி.காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு 300-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட திரண்டு இருந்தனர். ஆனால் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அதிகாலை 5.30 மணி முதல் தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதேபோல் கோபி, அந்தியூர், சித்தோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் இன்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்திற்கு கோவேக்சின் தடுப்பூசி இன்னும் வராததால் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் டோசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தடுப்பூசி போடும் அனைத்து ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    Next Story
    ×