என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நீலகிரி மாவட்டத்தில் 2 நாள் கனமழை எச்சரிக்கை

    நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் உருவாகியுள்ள தாழ்வழுத்த நிலை காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என 283 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை.

    தீயணைப்புத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 -க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதுபோன்று வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261295, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

    இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகம் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையவேண்டாம் என்றும் மாவட்டம் நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×