search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுவை மக்களை காப்பாற்றவே வார இறுதியில் ஊரடங்கு அமல்- கவர்னர் தமிழிசை விளக்கம்

    கொரோனாவில் இருந்து புதுவை மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கவர்னர் தமிழிசை கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதனையொட்டி பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்தார். பின்னர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

    இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மண்ணுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தந்தவர் பாரதிதாசன். அவரின் பாடலையே என் செல்போன் அழைப்பு பாடலாக வைத்துள்ளேன்.

    கொரோனாவில் இருந்து புதுவை மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வார இறுதியில் அதிக சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர். இதனால் தொற்று பரவுவதை தடுக்க வார இறுதி நாட்களில் முழு அடைப்பு அறிவித்துள்ளோம்.

    புதுவை மக்களை பாதுகாக்கவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனா பணியில் தனியார் ஆம்புலன்ஸ் சேவையையும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவிட் கேர் சென்டர்கள் தொடங்கி உள்ளோம்.

    புதுவையில் ஆக்சிஜன் வசதியுடன் தேவையான படுக்கைகள் உள்ளது. பாண்லேவில் குறைந்த விலையில் முக கவசம், கிருமிநாசினி இன்று முதல் வினியோகம் செய்யப்படும். கொரோனா கோர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளதால் வார இறுதி கதவடைப்பு தொடங்குகிறோம்.

    இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு இல்லை. சூழலை பொறுத்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி புதுவையின் தேவைக்கேற்ப செயல்படுகிறோம். ஜிப்மர், தனியார் மருத்துக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு இல்லை என தகவல் கிடைத்தது.

    சுகாதாரத்துறை செயலரை அழைத்து ஜிப்மர், தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடர்பு கொள்ள சொல்லியுள்ளேன். தேவையான மருந்துகள் புதுவை அரசிடம் உள்ளது. மருந்து தேவைப்படுபவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

    மக்களுக்கு அரிசி வினியோகம் குறித்து விரைவில் முடிவெடுப்போம். மக்களின் பாதுகாப்புக்கு ஏற்ப அடுத்தகட்ட முடிவெடுப்போம்.

    புதுவையில் வார நாட்களில் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான தகவல் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×