என் மலர்
செய்திகள்

காலிங்கராயன் வாய்க்காலில் சாயகழிவு நீரை வெளியேற்றிய 28 ஆலைகளுக்கு சீல்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன கால்வாயாக விளங்குவது காலிங்கராயன் கால்வாய். இந்த காலிங்கராயன் கால்வாயை நம்பி சுமார் 14,700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த கால்வாய் பகுதியில் மஞ்சள், வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கால்வாய்களில் சாயகழிவு நீரை கலப்பவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரங்களில் காலிங்கராயன் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக் கழிவுநீரை கலப்பதாகவும், இதனால் விளை நிலங்கள் பாதிக்கப் படுவதாகவும் மொடக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ. சிவசுப்ரமணியத்திடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய-விடிய ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலிங்கராயன் கால்வாயை ஒட்டி உள்ள பகுதிகளில் சிவசுப்பிரமணியம் எம்.எல்.ஏ நிர்வாகிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வெண்டிபாளையம் பகுதியின் பல்வேறு இடங்களில் பூஜிய முறையில் தண்ணீரை வெளியேற்றுவதாக அனுமதி பெற்று சாயக்கழிவு நீரை காலிங்கராயன் கால்வாய் பகுதியில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் காலிங்கராயன் வாய்க்காலில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை, அரசின் எந்தவித அனுமதியின்றி சட்டவிரோதமாக டீசல் பம்பு செட்களை கொண்டு, சாய ஆலை உரிமையாளர்கள் தண்ணீர் திருடி வந்ததும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ராட்ச பைப் லைன்களை பொக்லைன் எந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தினர். மேலும் அந்த ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி தற்போது பூஜிய முறையில் தண்ணீரை வெளியேற்றுவதாக அனுமதி பெற்று சாயக்கழிவு நீரை சட்டவிரோதமாக காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேற்றிய 28 சாய ஆலைகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேப்போன்று சட்ட விரோதமாக சாயக்கழிவு நீரை வெளியேற்றும் மற்ற ஆலைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






