search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து 9 பவுன், ரூ.25 ஆயிரம் திருட்டு

    வேலூரில் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து 9 பவுன், ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
    வேலூர்: 

    வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 43). கண்ணமங்கலத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் 2 பேர் வீட்டில் படுத்து தூங்கினர்.

    இரவு நேரத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்து விட்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்துள்ளனர். இதனால் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பைகள் மற்றும் நகை பெட்டிகளை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர்.

    அங்கு வைத்து பைகளில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம், பிளாஸ்டிக் உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்று விட்டனர்.

    நேற்று காலை கண்விழித்த திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். மேலும் மொட்டை மாடியில் நகைகள், பணம் இருந்த பைகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×