search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் பேசிய போது எடுத்த படம்.
    X
    தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் பேசிய போது எடுத்த படம்.

    மக்கள் மனதில் இருந்து என் பெயரை நீக்க முடியாது- துரைமுருகன் பேச்சு

    இங்கு என் பெயரை அழித்துவிடலாம் மக்கள் மனதில் இருந்து என் பெயரை யாராலும் அழிக்க முடியாது என்று லாலாபேட்டையில் நடைபெற்ற அரசு பள்ளி முகப்பு வாயில் திறப்பு விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை)

    ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் சிமெண்டு சாலை, நெல்லிக்குப்பம் ரங்கநாதபுரம் மற்றும் கத்தாரிகுப்பம். ஏகாம்பரநல்லூர் கூட்ரோட்டில் பயணிகள் நிழற்கூடம், லாலாப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நுழைவுவாயில் ஆகிய பணிகள் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    முன்னதாக நுழைவுவாயிலில் நிதி உதவி துரைமுருகன் எம்.எல்.ஏ. என்று போடப்பட்டு இருந்ததால் துரைமுருகனின் பெயரை அழிக்கவேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து துரைமுருகனின் பெயர் பேப்பரால் மறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நுழைவு வாயிலை திறப்பதற்காக வந்த துரைமுருகன், தன்னுடைய பெயர் பேப்பரால் மறைக்கப்பட்டிருப்பதை பார்த்து, பேப்பரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். உடனே ஏணி கொண்டு வரப்பட்டு அதன் மீது ஏறிய தொண்டர் ஒருவர் துரைமுருகனின் பெயர் மறைக்கப்பட்டிருந்த பேப்பரை அகற்றினார்.

    இதன்பிறகு பள்ளியின் நுழைவுவாயிலை தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இதுவரை தொகுதிக்கு செய்வதில் நான் கட்சி பாகுபாடு பார்ப்பதில்லை. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர், நுழைவு வாயில், குடிதண்ணீர் ஆகியவைகளை செய்து தந்துள்ளேன். என் பெயர் இருக்கக்கூடாது என்றால் எடுத்துவிடுங்கள். சட்டமன்றத்தில் நான் 47 ஆண்டுகாலம் உறுப்பினராக இருக்கிறேன். அங்கே என் பெயர் உள்ளது. அதை எடுத்துவிட முடியுமா?

    இன்றைக்கு 2 கோடி பேர் இருக்கிற கட்சிக்கு பொதுச்செயலாளர் என்ற இடத்தில் உட்கார வைத்துள்ளீர்கள். தி.மு.க. வரலாறு எழுதும்போது என் பெயர் வருமே அதை எடுத்துவிட முடியுமா. தமிழகத்தில் 40 அணைகளை கட்டி உள்ளேன். 9 கலெக்டர் அலுவலகங்களை கட்டி உள்ளேன். அங்கெல்லாம் என் பெயரை எடுக்க முடியுமா?

    இங்கு என் பெயரை முழுவதுமாக எடுத்து விடுங்கள். நான் மகிழ்ச்சி அடைவேன். மக்களின் மனதில் இருந்து என் பெயரை நீக்க முடியாது. என் பெயரை எடுக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு எழுத்து கூட இல்லாமல் முழுவதுமாக எடுத்துவிடுங்கள். அப்படி எடுத்தால் அதனை யாரும் இங்கே தடுக்க வேண்டாம். யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர்ஆனந்த் எம்.பி., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட், மாவட்ட பிரதிநிதி அக்ராவரம் முருகன், கோகுலன், ராதாகிருஷ்ணன், வாசுதேவன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×