search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    துணை சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை

    புதுவையில் உள்ள 15 துணை சுகாதார நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கவனிப்பு மையம் என்ற பெயரில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடன் சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளரும் மாவட்ட கலெக்டருமான அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தனியார் கல்லூரிகள் தரப்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் பங்களிப்பு குறைவாக உள்ளது என அரசு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

    மேலும், மக்கள் நலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்க்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வருகிற 10-ந் தேதிக்குள் கொரோனா பரிசோதனையை தொடங்க வேண்டும். அதில் தினசரி குறைந்தபட்சம் 100 பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய 100 படுக்கைகள் கட்டாயம் வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதோடு, புதுவையில் உள்ள 15 துணை சுகாதார நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கவனிப்பு மையம் என்ற பெயரில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    டி.என். பாளையம், மேல் சாத்தமங்களம், குருவிநத்தம், மணமேடு,லிங்கா ரெட்டிபாளையம், கோரி மேடு, பொறையூர், பண்ட சோழநல்லூர், ஆலங்குப்பம், செல்லிபட்டு, நல்லவாடு, திருவண்டார்கோயில், கோர்க்காடு, கொடாத்தூர், குருமாம்பட்டு ஆகிய பகுதியில் உள்ள துணை சுகாதார மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

    Next Story
    ×