search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்தில் மூழ்கடிக்கப்பட்ட மணிகண்டனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கொண்டு வந்த போது எடுத்த படம்.
    X
    குளத்தில் மூழ்கடிக்கப்பட்ட மணிகண்டனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கொண்டு வந்த போது எடுத்த படம்.

    வாலிபரை கொன்று உடலை குளத்தில் மூழ்கடித்த பயங்கரம்- கொலையை மறைக்க முயன்ற நண்பர்கள் கைது

    அஞ்சுகிராமத்தில் வாலிபரை கொன்று உடலை குளத்தில் மூழ்கடித்த நண்பர்கள், கொலையை மறைக்க உடலை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
    அஞ்சுகிராமம்:

    குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). குடிசை வீட்டில் இவர் தனியாக வசித்து வந்தார். செங்கல்சூளை தொழிலாளி.

    கடந்த 1-ந் தேதியில் இருந்து அவரை காணவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயந்து போன அவருடைய சகோதரி முத்து லட்சுமி பல இடங்களில் தேடி பார்த்தார். உறவினர் வீடுகளிலும் அவரை பற்றி விசாரித்தார். எந்தவொரு தகவலும் இல்லை.

    இதனால் முத்து லட்சுமி அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில், அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தொலைபேசிக்கு மர்ம நபர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, காணாமல் போன மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளார் என திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் ஏதோ விபரீத சம்பவம் நடந்துள்ளது என முடிவுக்கு வந்து விசாரணை களத்தில் குதித்தனர். மணிகண்டன் விவகாரத்தில் துப்பு துலக்க கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மணிகண்டனுடன் சுற்றி திரிந்த ஜேம்ஸ் டவுன் லட்சுமிபுரத்தை சேர்ந்த நிஷாந்த் (32), இறச்சகுளம் பகுதியை சேர்ந்த கணேஷ் (28) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில், காணாமல் போன மணிகண்டனை கொன்றது அவர்கள் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. மணிகண்டனை கத்தியால் குத்திக் கொன்று விட்டு உடலை குளத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

    மணிகண்டனும், 3 பேரும் நண்பர்கள். இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததோடு, கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது. அடிக்கடி இவர்கள் இரவில் ஒன்றாக அமர்ந்து போதையில் இருப்பது வழக்கமாம். அப்போது மணிகண்டன் நண்பர்களின் செல்போனை திருடி விட்டதாகவும், மேலும் கஞ்சாவை அவர்களுக்கே தெரியாமல் மறைத்து வைத்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு பிறகு மணிகண்டன் மீது 3 பேருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அவரை பழிவாங்க வேண்டும் என 3 பேரும் திட்டம் போட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று இரவு 4 பேரும் சேர்ந்து மணிகண்டனின் வீடு அருகே மது அருந்தி உள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உருவானது.

    இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதோடு திடீரென கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கொலை பற்றி வெளியே தெரியாமல் இருக்க உடலை மறைக்க முடிவு செய்தனர். அதாவது, குளத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் உடலை கட்டி வைத்து தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இருக்கும்படி செய்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டனர். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாட்டிக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மணிகண்டன் உடல் மறைத்து வைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக 3 பேரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு உடல் கட்டி வைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் உடலை மீட்பதற்காக கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதால் அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். குளத்தில் இருந்த மரத்தின் அடியில் உடல் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில், தண்ணீருக்குள் உடல் மூழ்கடிக்கப்பட்டு வெளியே தெரியாதபடி இருந்தது. இந்த உடலை தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்துடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    பிறகு பிரேத பரிசோதனைக்காக மணிகண்டன் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாந்த், கணேஷ், சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். வாலிபரை கொன்று உடலை குளத்தில் மறைத்து வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×