search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் கணேசுடன் காயத்ரி.
    X
    கணவர் கணேசுடன் காயத்ரி.

    கணவரின் உயிருக்கு கூலிப்படையிடம் ரூ.2 லட்சம் விலை பேசிய மதுரை பெண்

    கணவரின் உயிருக்கு அவரது கூலிப்படையிடம் ரூ.2 லட்சம் விலை பேசிய மதுரை பெண் குறித்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகில் கேசவ திருப்பாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 38), புகைப்பட கலைஞர். இவருக்கும், மதுரையை சேர்ந்த காயத்ரிக்கும் (35) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4½ வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேஷ், தனது மனைவி, மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வீடு புகுந்து, கணேசனை பலமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். வீட்டில் மற்றொரு அறையில் தூங்கிய மனைவி காயத்ரி சத்தம் போட்டார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் அவர் கணேசை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து வடசேரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தது எப்படி? என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதனால் போலீசாரின் முழு கவனமும் கணேஷின் மனைவி காயத்ரி மீது விழுந்தது.

    அவரிடம் துருவி, துருவி நடத்திய விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்ட முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

    பின்னர் போலீசார் நேற்றுமுன்தினம் காயத்ரி, கூலிப்படையினரான நெய்யூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் (44), குருந்தங்கோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான காயத்ரி பல திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். அந்த பரபரப்பு தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    காயத்ரிக்கும், நாகர்கோவிலில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தவர், மழலையர் பள்ளியை தொடங்கிய போது காயத்ரி அங்கு வேலைக்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாகி உள்ளது. கள்ளக்காதலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலைக்கு காயத்ரி சென்றார். ஆசைவார்த்தை கூறி அவரை தன்னுடைய வளையத்துக்குள் கொண்டு வந்தார், கள்ளக்காதலன்.

    இந்த நிலையில் காயத்ரி கணவரிடம், சகோதரருக்கு கடனாக பணம் கொடுக்க வேண்டும் என கூறி வீட்டை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் பெற்றார். இந்த பணத்தை அவர் கள்ளக்காதலனிடம் கொடுத்தார். பின்னர் இந்த பணம் பற்றி கணேஷ், காயத்ரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து மழுப்பான பதிலை தெரிவித்து தட்டிக்கழித்து வந்துள்ளார். இதற்கிடையே, தன்னுடைய கள்ளக்காதல் விவரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கள்ளக்காதலனிடம் நடந்த விவரத்தை கூறி என்ன செய்யலாம் என கேட்டுள்ளார். அதற்கு, உன்னுடைய கணவரை கொன்று விடலாம் என கள்ளக்காதலன் பட்டென்று கூறியுள்ளார். ஏற்கனவே கள்ளக்காதல் மோகத்தில் இருந்த காயத்ரியும், கணேஷை கொல்ல சம்மதம் தெரிவித்ததோடு, சதித்திட்டத்தை அரங்கேற்ற தொடங்கினர்.

    அதன்படி கூலிப்படையை ஏவி கொல்ல முடிவெடுத்தனர். இதற்காக நெய்யூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் (44), குருந்தங்கோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (32) ஆகியோரை தேர்ந்தெடுத்தனர். கணவரை கொல்ல காயத்ரி கூலிப்படையினருக்கு ரூ.2 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து கள்ளக்காதலன், காயத்ரியின் திட்டப்படி கூலிப்படையினர் 2 பேர் சம்பவத்தன்று நள்ளிரவு வீடு புகுந்து கணேஷை தாக்கினர். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த சம்பவத்தை மறைத்துக் கொண்டு காயத்ரி, உறவினர்களிடம் நாடகமாடியதும் அம்பலமானது. இதனை காயத்ரி வாக்குமூலமாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். தலைமறைவான காயத்ரியின் கள்ளக்காதலனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை பிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×