என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரும்பு கம்பி நுழைவு வாயில் கேட்டில் தலை சிக்கி தவித்த குட்டி கரடி.
    X
    இரும்பு கம்பி நுழைவு வாயில் கேட்டில் தலை சிக்கி தவித்த குட்டி கரடி.

    இரும்பு கேட்டில் தலை சிக்கி தவித்த குட்டியை மீட்க தாய் கரடி நடத்திய பாச போராட்டம்

    இரும்பு கேட்டில் தலை சிக்கி தவித்த குட்டியை மீட்க தாய் கரடி பாச போராட்டம் நடத்தியது. இதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டியை பத்திரமாக மீட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் வார்விக் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த பகுதியில் எஸ்டேட் மேலாளர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் நுழைவு வாயில் கேட் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் கரடியொன்று 2 குட்டிகளுடன் தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்தது. அப்போது ஒரு குட்டி கரடி அங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்த கேட்டின் நுழைவு வாயில் கேட்டின் கம்பிகளின் இடுக்குகள் வழியாக வெளியே உள்ளே செல்ல முயற்சித்ததாக தெரிகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக குட்டி கரடியின் தலை அங்கிருந்த கேட் கம்பிகளுக்கு இடையே சிக்கியது. இதனால் அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த குட்டி ஆக்ரோஷமாக கத்தியது. இதைக்கண்ட தாய் கரடி மற்றொரு குட்டியை தன் முதுகில் சுமந்தவாறு கத்தியபடி தனது குட்டியை மீட்கும் முயற்சியில் பாசப்போராட்டம் நடத்தியது

    கரடிகளின் சத்தம் கேட்டு தனியார் எஸ்டேட் மேலாளர் வெளியே வந்து பார்த்தார். குட்டி கரடியின் தலை கேட்டில் சிக்கியதையும், அதன் அருகில் 2 கரடிகள் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் கோத்தகிரி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு குட்டியுடன் நின்றிருந்த கரடியை அங்கிருந்து துரத்தினார்கள். பிறகு அவர்கள் கேட்டின் இரும்பு கம்பிக்கு இடையில் தலை சிக்கி தவித்த குட்டி கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கேட்டில் உள்ள இரும்பு கம்பிகள் வலுவாக இருந்தாலும், குட்டி கரடி ஆக்ரோஷத்துடன் கத்தியதாலும் அதை உடனடியாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரும்பு கம்பிகளை வெட்டுவதற்கான மின் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, கேட்டின் இரும்பு கம்பிகளை வெட்டி எடுத்து கரடியின் தலையை வெளியே எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கம்பியில் இருந்து விடுபட்ட கரடி குட்டி அங்கிருந்து ஓடிச்சென்று அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. சுமார் 1½ மணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் குட்டி கரடியை பத்திரமாக மீட்டனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கேட்டில் சிக்கிய குட்டி கரடிக்கு 1½ வயது இருக்கும். முன்னதாக கம்பிக்கு இடையில் சிக்கி தவித்த தனது குட்டியை மீட்க தாய் கரடி பாச போராட்டம் நடத்தியதை அப்பகுதியில் அந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
    Next Story
    ×