search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நெய்வேலியில் கழுத்தை இறுக்கி மனைவி கொலை- அச்சத்தில் கணவரும் தற்கொலை

    நெய்வேலியில் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றுவிட்டு அச்சத்தில் என்.எல்.சி. பாதுகாப்பு படை வீரரும் தற்கொலை செய்து கொண்டார்.
    நெய்வேலி:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் எக்கேலா கணபதி(வயது 33). இவர் நெய்வேலி வட்டம் 22-ல் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் தங்கியிருந்து என்.எல்.சி.யில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சந்தோஷி (24). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. எக்கேலா கணபதி நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர் செல்லவில்லை. இதையடுத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை பொறுப்பு அதிகாரி, எக்கேலா கணபதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சந்தேகத்தின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் எக்கேலா கணபதியின் வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து போலீசார் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் எக்கேலா கணபதி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு சந்தோஷி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது குறித்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எக்கேலா கணபதி தனது மனைவி என்றும் பாராமல் மின்ஒயரால் கழுத்தை இறுக்கி சந்தோஷியை கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியை கொன்றுவிட்ட அச்சத்தில் அவர் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சக்திகுமார் அளித்த புகாரின் பேரில் இவர்களது சாவுக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியை கொன்று விட்டு என்.எல்.சி. மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×