என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிலில் உடைக்கப்பட்ட உண்டியலை போலீசார் பார்வையிட்டனர்.
    X
    கோவிலில் உடைக்கப்பட்ட உண்டியலை போலீசார் பார்வையிட்டனர்.

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

    பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவதற்காக கோவிலில் 8 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்கள் நிரம்பிய பிறகு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியலை திறந்து பக்தர்களின் காணிக்கை பணம் எண்ணப்படும். இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் சிறப்பு வழிபாடுகள் முடிந்தவுடன் கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இன்று காலை கோவில் நடை திறப்பதற்காக கோவிலுக்கு அர்ச்சகர்கள் வந்தனர். அப்போது கோவிலின் முன்பகுதியில் உள்ள ராஜகோபுரத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அர்ச்சகர்கள் உடன் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் உடைக்கப்பட்டு கிடந்த உண்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பகுதியில் ஒரு சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டிருந்தது. அந்த கேமரா காட்சியை கைப்பற்றி உண்டியலை உடைத்த மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தலாம் என சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்க்க சென்றனர். அப்போது அந்த சி.சி.டி.வி. கேமரா பழுதடைந்திருந்தது தெரிய வந்தது.

    மேலும் இன்று கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ராஜகோபுரத்தின் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணத்தை முழுமையாக கொள்ளை அடிக்காமல் பாதிபணத்தை மட்டும் கொள்ளையடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் மற்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை கைப்பற்றி உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது உண்டியல் உடைக்கப்பட்டது உண்மை தான். ஆனால் உண்டியலில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவில்லை. சி.சி.டி.வி. கேமரா இருந்ததைப் பார்த்த மர்மநபர்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல் சென்று இருக்கலாம் என தெரிவித்தனர். இதற்கு சி.சி.டி.வி. கேமரா பல ஆயிரங்கள் செலவு செய்து வைக்கப்பட்டும் அதனை முறையாக பராமரிக்காததால், இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சம்பந்தப்பட்ட நிர்வாகம் பராமரித்து கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×