search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தரகர் ஜெயக்குமார்
    X
    இடைத்தரகர் ஜெயக்குமார்

    இடைத்தரகர் ஜெயக்குமார் 10 ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்

    டி.என்.பி.எஸ்.சி. வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் 10 ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதன் மூலம் அவர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி, குரூப்-4, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர் சேட் தலைமையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தினமும் குற்றவாளிகளின் கைது பட்டியல் வெளியிடப்பட்டது.

    நேற்று கைது பட்டியல் வெளியாகவில்லை. இந்த வழக்கில் இதுவரை டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் ஓம் காந்தன், மாணிக்கவேலு, போலீஸ்காரர்கள் சித்தாண்டி, முத்துக்குமார், பூபதி ஆகியோர் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். ஜெயக்குமார், சித்தாண்டி, ஓம் காந்தன் ஆகிய 3 பேரையும் காவலில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்கள் 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். முறைகேடு நடந்த கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய தேர்வு மையங்களுக்கும் இவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

    குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களை தனியார் பார்சல் வேனில் ஏற்றிவரும் போது நடுவழியில் நிறுத்தி தங்களுக்கு வேண்டிய தேர்வர்களின் விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து, பின்னர் விடைத்தாள்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வைத்து தான் விடைத்தாள்களை பார்சல் வேனில் இருந்து மாற்றியுள்ளனர். விக்கிரவாண்டிக்கும் ஜெயக்குமார் உள்ளிட்ட குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்தார்கள்.

    விசாரணை

    நேற்றும் 2-வது நாளாக இந்த நேரடி விசாரணை நடந்தது. முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி? என்பது பற்றி ஜெயக்குமார் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார். அதனை போலீசார் வீடியோ காட்சியாக பதிவு செய்தனர்.

    முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    முறைகேடு வாயிலாக வந்த பணத்தில் ஜெயக்குமார் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சென்னை முகப்பேர் மற்றும் ஆவடியில் 3 வீடுகள் அவருக்கு சொந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடுகளை அரங்கேற்றுவதற்காக ஜெயக்குமார் சென்னை அண்ணாநகரில் ‘ஆல் சக்சஸ்’ என்ற பெயரில் தனியாக அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஜெயக்குமாரிடம் நடக்கும் விசாரணை அடிப்படையில் சில முக்கிய புள்ளிகள் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×