search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்
    X
    மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்

    ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது

    மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் 29 -ந் தேதி வரை மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையை சீரமைத்த பின்னர் 1-ந் தேதி வழக்கம்போல் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது இதனிடையே கல்லாறு- ஹில் குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரும் மலை ரெயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி இயக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 19 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் 9-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

    ரெயில் பாதையை சீரமைப்பதற்காக கடந்த 2-ந் தேதி மேட்டுப்பாளையத்திலிருந்து பி.டி .ரெயிலில் கம்பரசர் மற்றும் பொக்லின் எந்திரங்கள் ஏற்றப்பட்டு மலைப்பாதையில் மண்சரிவு, பாறை உருண்டு விழுந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது மலை ரெயில் இருப்புபாதை பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

    ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது .

    சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்ததையொட்டி மலை ரெயில் போக்குவரத்து 8 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது வழக்கம்போல் காலை 7 .10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    Next Story
    ×