search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்.
    X
    ஊட்டி மலை ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்.

    ஊட்டி மலை ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்

    மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் போக்குவரத்து14 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
    நீலகிரி:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. யுனஸ்கோ நிறுவனம் மலைரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. மலைரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளைக்கண்டு ரசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 15-ந்தேதி இரவு மற்றும் அதனைத்தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையில் மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 23-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து கடந்த 16-ந்தேதி முதல் நேற்று 29-ந்தேதி வரை 14 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

    ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மலைரெயில் இருப்புப்பாதை பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர்.

    ரெயில் பாதையில் விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன. சரிந்து கிடந்த மண்ணும் ரெயில் பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

    சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் ராக் பார்கள் அகற்றப்பட்டு அவைகளுக்கு பதிலாக புதிய ரெயில் தண்டவாளங்கள் ராக்பார்கள் பொருத்தப்பட்டன. மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணி அனைத்தும் நேற்று முடிவடைந்தது.

    அதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் போக்குவரத்து14 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் புறப்பட்டுச் சென்றது. மலைரெயிலில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    Next Story
    ×