என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட கமலம், அய்யப்பன்
    X
    கைது செய்யப்பட்ட கமலம், அய்யப்பன்

    நெய்வேலி அருகே 5 வயது சிறுமியை கொன்று புதைத்தது ஏன்?- கைதான பெண் வாக்குமூலம்

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே 5 வயது சிறுமியை கொன்று புதைத்தது தொடர்பாக கைதான பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    நெய்வேலி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளமேடு கிராமத்தை சேர்ந்தவர் உத்தண்டி (வயது 35). இவரது மனைவி ராஜேஸ்வரி (32). இவர்களுக்கு அம்சவல்லி(7), மீனா (5), கனகவள்ளி (3) என்ற 3 குழந்தைகள் இருந்தனர்.

    இவர்கள் குடும்பத்துடன் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி கமலம் (59) என்பவரது வீட்டில் தங்கி, விவசாயம் மற்றும் கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக உத்தண்டி, ராஜேஸ்வரி ஆகியோர் வெளியே செல்லாமல் கமலம் வீட்டில் கொத்தடிமைபோல் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரியின் மகள் மீனா திடீரென்று காணாமல் போனாள். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடினர்.

    இதற்கிடையே சிறுமி மீனா கொலை செய்யப்பட்டு விருத்தாசலம் அருகே உள்ள முதனையில் உள்ள முந்திரி தோப்பு பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையிலான போலீசார் ராஜேஸ்வரி வேலை பார்த்து வந்த கமலம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதனால் போலீசாருக்கு கமலம் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் கமலத்திடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி மீனாவை கொலை செய்து புதைத்து விட்டதாக கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, நானும், எனது மகள் அஞ்சலை (34), மகன் அருள்முருகன் மற்றும் உறவினர் அய்யப்பன் (31) ஆகியோர் சேர்ந்து கொலை செய்யப்பட்ட மீனாவின் உடலை முதனையில் உள்ள முந்திரி தோப்புக்கு கொண்டு சென்று புதைத்தோம் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கமலத்தை அழைத்து கொண்டு முந்திரி தோப்புக்கு சென்றனர். அங்கு சிறுமி மீனா உடலை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார்.

    அதன் பின்னர் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அங்கு மீனாவின் உடல் இருந்தது. அதனை மீட்டு சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் மீனாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சிறுமி மீனாவை கொன்று புதைத்தது தொடர்பாக கமலம், அவரது மகள் அஞ்சலை, உறவினர் அய்யப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அருள்முருகன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    கைதான கமலம் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    எனது வீட்டில் உத்தண்டி, அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். எனது வீட்டின் மாடியில் மணிலா காய வைத்திருந்தேன். அதனை ராஜேஸ்வரியின் மகள் மீனா மிதித்து சேதப்படுத்தினாள். இதில் ஆத்திரம் அடைந்த நான் சிறுமி மீனாவின் தலைமுடியை பிடித்து இழுத்து மாடி சுவர் மீது மோத செய்தேன். இதில் அவளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்தில் அவள் இறந்து விட்டாள்.

    இதனையறிந்த நான், மீனாவின் பெற்றோருக்கு தகவல் கூறாமல் மறைக்க முடிவு செய்தேன். அதன் பின்னர் எனது மகன் அருள்முருகனிடம் இந்த தகவலை கூறினேன். அதனை தொடர்ந்து எனது மகள் அஞ்சலை, உறவினர் அய்யப்பன் ஆகியோருடன் மீனாவின் உடலை காரில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் முந்திரி தோப்புக்கு கொண்டு சென்றோம்.

    அங்கு குழி தோண்டி அந்த உடலை புதைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டுக்கு வந்துவிட்டோம். ஆனால், போலீசார் துப்பு துலக்கி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கமலம், அஞ்சலை, அய்யப்பன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×