search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
    X
    வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

    கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் மழைபெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. இதை தொடர்ந்து அங்குள்ள அணைகளிலிருந்து நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்து 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

    கடந்த 17-ந் தேதி பாசனத்திற்காக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சுமார் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் நேற்று மதியம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் சங்கத்தலைவர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். நேற்று காலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.87 அடியாக இருந்தது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்தது. மேலும் லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் மழைபெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் 22 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று முதல் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் நீர்மட்டம் மேலும் உயர்ந்ததால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×