search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அகெட் வகை அணிகலன்கள்
    X
    கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அகெட் வகை அணிகலன்கள்

    கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் - வெளிநாட்டினர் அணியும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிப்பு

    திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியின்போது நேற்று வெளிநாட்டினர் அணியும் அகெட் வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது கீழடி ஊராட்சி. இப்பகுதியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017 வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று அதில் உறை கிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், தண்ணீர் தொட்டிகள், மருத்துவ குடுவைகள், ஈட்டி, பெண்கள் அணியும் ஆபரணங்கள், கத்தி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பொருட்கள் கிடைத்தன.

    அதன் பின்னர் தமிழக அரசு சார்பில் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில தொல்லியல்துறை சார்பில் 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் செம்பு நாணயங்கள், தாயக்கட்டைகள், கத்தி, உறை கிணறு என மொத்தம் 5,820 பொருட்கள் கிடைத்தன. அதன் பின்னர் ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 5-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கின. இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களில் ஏராளமான குழிகள் தோண்டப்பட்டு தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.

    இதில் சிறிய பானை, ஓடுகள், பெரிய வட்டப்பானை, இரட்டை சுவர், நீளச்சுவர், சிறிய அடுப்புடைய குட்டி சுவர், கலயம், உறைகிணறு, பெரிய செங்கல் சுவர் உள்ளிட்டவை கிடைத்தன. மேலும் மனித எலும்பு துண்டுகள், பாசி மணிகள், பழங்கால எழுத்தாணி உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. இதன் மூலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது தற்போது தெரிய வருகிறது. மேலும் விவசாயி முருகேசன் என்பவரது நிலத்தில் தோண்டும் போது 5 உறைகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த உறை கிணற்றை மேலும் ஆராய்ச்சி செய்தபோது பூமிக்கடியில் கூடுதலாக மேலும் 2 உறைகள் இருப்பது தெரிய வந்தது. தற்போது 7 உறைகள் கொண்ட உறை கிணறாக அது உள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கடந்த காலங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் உறை கிணறுகளில் உள்ள உறையின் உயரம் சுமார் 1 அடி தான் இருக்கும். ஆனால் தற்போது இந்த உறைகிணற்றின் உறையின் உயரம் 1½ அடியாக உள்ளது. மேலும் இந்த இடத்தில் குழிகள் தோண்டும்போது முதலில் 6 உறைகள் வரை சவடு மண் வந்துள்ளது. அதன் பின்னர் 7-வது உறையை கண்டுபிடிப்பதற்காக தோண்டும் போது அதில் ஆற்று மணல் வந்தது.

    மேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணுக்குள் புதைந்திருக்கும் இந்த உறையில் எந்தவித விரிசலும் இல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது. அதன் பின்னர் வெயில் பட்டவுடன் அந்த உறையில் விரிசல் ஏற்பட தொடங்குகிறது. பழங்காலத்தில் உள்ள இந்த உறைகளை மிக சிறந்த முறையில் அப்போதைய மக்கள் தயாரித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது.

    மேலும் போதகுரு என்பவரது நிலத்தில் ஏற்கனவே நீளச்சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதை தோண்டி ஆராய்ச்சி செய்யும் போது அந்த சுவற்றிக்கு கீழே அகலமான நன்கு கனமான நிலையில் உள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சேதாரமான நிலையில் சிறிய அளவிலான பானையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே வெளிநாட்டு மக்கள் அணியும் அகெட் என்று அழைக்கப்படும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அணிகலன்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகெட் வகை கல்லில் செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. இதன் மூலம் பண்டைய தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நல்ல தொடர்பு இருந்துள்ளது என்றும் தெரிய வருகிறது. 7 உறைகள் கொண்ட இந்த உறைகிணறு சுமார் 8 அடி உயரம் உள்ளது எனவும், மேலும் தோண்டி ஆராய்ச்சி நடைபெறும்போது இன்னும் கூடுதலாக உறைகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×