search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட ரெயில் ஜோலார்பேட்டை வந்தடைந்த போது எடுத்த படம்.
    X
    ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட ரெயில் ஜோலார்பேட்டை வந்தடைந்த போது எடுத்த படம்.

    சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட ரெயில்

    சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்தடைந்தது.
    சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.65 கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்றது.

    இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வாட்டர் வேகன்’ நேற்று முன்தினம் காலை ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டை சரக்கு ரெயில் நிற்கும் 5-வது யார்டை வந்தடைந்தது. ஒவ்வொரு வேகனிலும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் நிரப்ப முடியும். இந்த ரெயிலில் மொத்தம் 50 வேகன்கள் உள்ளன.

    நேற்று மாலை சோதனை ஓட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சென்னை நகர மக்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல் தினசரி 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் சோதனை ஓட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. குழாய்கள் அனைத்தையும் சுத்தம் செய்தபின்னர் சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இருந்து குழாய் மூலம் பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகில் உள்ள ரெயில்வே வேகனுக்கு குடிநீர் எடுத்து செல்லும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சிலர் தங்களது நிலத்தின் வழியாக தண்ணீர் எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் நந்தன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகு மாற்றுப்பாதையில் குடிநீர் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் 6 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்டபடி சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு வேகனில் நீரேற்றப்படும். இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்க காலதாமதம் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×