search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த கரூர் கலெக்டர்
    X
    கலெக்டர் அலுவலகத்தில் மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த கரூர் கலெக்டர்

    கலெக்டராக விரும்பும் பள்ளி மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்திய கரூர் கலெக்டர்

    தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய கரூர் கலெக்டர் அன்பழகன், அந்த மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து ஊக்கப்படுத்தினார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில், ஆங்கில பாடத்திற்கான தேர்வில் “நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கு பதில் அளித்த 6-ம் வகுப்பு மாணவி மனோபிரியா, “எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர் தான்” என்று விடை எழுதியிருக்கிறார். விடைத்தாளை திருத்தும்போது, மாணவி அளித்திருந்த அந்த பதில் ஆசிரியரை பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் இருந்தது.

    மேலும் இந்த தகவலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி, மாவட்ட கலெக்டர் அன்பழகனின் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ வாயிலாக தெரிவித்துள்ளார். இதனைப்பார்த்த மாவட்ட கலெக்டர், அந்த மாணவியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வாருங்கள், என்றார்.

    இதையடுத்து ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் சிறந்து விளங்கி பதக்கம் பெற்ற அப்பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து வந்து மாவட்ட கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

    மாவட்ட கலெக்டராக விரும்பிய மாணவியை கலெக்டர் அன்பழகன் அழைத்துப் பாராட்டி, தேர்வில் அந்த மாணவி எழுதிய விடைத்தாளையும் பார்த்தார். பின்னர் அவர், யாரும் எதிர்பாராத வகையில், தான் அமர்ந்திருந்த இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து, “நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் ஒரு மாவட்ட கலெக்டராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

    பின்னர் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கி வாழ்த்தினார்.
    Next Story
    ×