search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை பகுதியில் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
    X

    ஊத்துக்கோட்டை பகுதியில் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

    ஊத்துக்கோட்டை பகுதியில் மின்தடையால் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் உள்ள மின்வாரிய மின் பகிர்வு நிலையத்தில் இருந்து சுற்றியுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை, அந்தேரி, போந்தவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், சீத்தஞ்சேரி, பென்னாலூர்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் மின்தடை நீடித்து வந்தது.

    இந்த நிலையில் மின் தடையை கண்டித்தும் சீரான மின்சாரம் வழங்கக்கோரியும் ஊத்துக்கோட்டை, அந்தேரி உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மின் ஊழியர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக மின்தடையை கண்டிக்கும் விதமாக மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×