search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில்  ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம்- முதலீட்டாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
    X

    தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம்- முதலீட்டாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

    தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படுவதாக கூறிய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். #GIM2019 #EdappadiPalaniswami #NirmalaSitharaman
    சென்னை:

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

    2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது.

    2 நாள் மாநாட்டின் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல நூற்றாண்டு காலமாகவே நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரம், வெளிநாட்டினரை ஈர்க்கக் கூடியதாக விளங்குகிறது. பல நூற்றாண்டுக்கு முன்பே கடல் தாண்டி வணிகம் நடத்தியவர்கள் தமிழ் மன்னர்கள்.

    வெளிநாடுகளில் உள்ள கட்டிடக்கலை, ஆலயங்கள் கூட தமிழ்நாட்டில் உள்ளன. திறமையான தொழிலாளர்களை கொண்ட முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இங்கு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளேன்.

    உலக அளவில் தொழில் துறையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் உணவுஉற்பத்தி, பணவீக்கம் சீராக நிர்வகிக்கப்படுகிறது. மின்னணு நிர்வாகம், கால நிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியா சிறந்து விளங்குகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக பராமரிக்கப்படுகிறது.

    60 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக ஜி.எஸ்.டி. வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலை என்ற அளவில் உள்ளது.

    ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் இந்தியாவில் 2 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய இருக்கிறது. ராணுவ தளவாடங்களை பெறுவதில் இந்தியா மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது. தமிழகத்தில் சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    யார் முதலீடு செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். தமிழகம் தொழில்தொடங்க உகந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழக மாணவர்கள் தொழில் தொடர்பான பயன்பாட்டிற்காக ஜப்பானிய மொழி, கொரியா மொழி உள்ளிட்டவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முதலீட்டாளர்களை வரவேற்று பேசினார்.

    இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

    இதேபோல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரும் நிறுவனங்களுக்கு 140 அரங்குகளும், சிறு குறு நிறுவனங்களுக்கு 110 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    மதியம் 2 மணிக்கு முதலீட்டு கருத்தரங்கங்களும், வெளிநாட்டு கருத்தரங்கங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது. ஒவ்வொரு கருத்தரங்கத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதேபோல், ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. மாலை 3 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன.

    2 நாள் மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.98 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் வரை சாலைகள் புதுப்பிக்கப்பட்டன.

    சென்னை வர்த்தக மையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை முழுவதும் ஆங்காங்கே, மாநாடு தொடர்பான விளம்பரங்கள் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன.

    விமானம், உணவு, வாகனம், பெட்ரோல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர் உள்ளிட்ட 11 துறைகள் மீது, தொழில் துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி உள்ளனர்.

    இந்த துறைகளில், வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும், முயற்சி எடுத்தனர். அதற்கு, பலன் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இந்த மாநாட்டில், அதிக முதலீட்டிற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

    மேலும், ஒரு முறை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள் தயாரிக்க ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த துறையில் மட்டும், ரூ.35 ஆயிரம் கோடி முதலீடுகள் வரலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    2 நாள் மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கொரியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கிறார்கள். #GIM2019 #EdappadiPalaniswami #NirmalaSitharaman
    Next Story
    ×