search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேனில் 4 வயது சிறுமி பலாத்காரம்- தென்காசியில் கைதான பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு
    X

    வேனில் 4 வயது சிறுமி பலாத்காரம்- தென்காசியில் கைதான பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு

    தென்காசியில் பள்ளி வேனில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விளையாட்டு ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 4 வயது சிறுமி படித்து வருகிறாள். தினமும் அந்த சிறுமி காலையில் வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் அதே வேனில் வீட்டுக்கு திரும்பி வருவாள்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அந்த சிறுமி வேனில் பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். மாலையில் வேனில் இருந்து இறங்கிய சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டு உள்ளாள். அந்த சிறுமி இறங்கியவுடன் டிரைவரும் வேனை வேகமாக எடுத்து கொண்டு சென்று விட்டார்.

    பின்னர் தாயாருடன் அந்த சிறுமி வீட்டிற்கு நடந்து சென்ற போது சிறுமி அழுதாள். பின்னர் அந்த சிறுமி தனது தாயாரிடம் வேனில் வரும்போது தனது பள்ளி ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக கூறினாள்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த சிறுமியை பள்ளிக்கூட விளையாட்டு ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தினமும் அந்த சிறுமி பயணிக்கும் வேனில் வழி நெடுகிலும் மற்ற மாணவ-மாணவிகள் இறங்கி கொள்ள, கடைசியாக இந்த சிறுமி மட்டும் தனியாக ஊருக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி ஆசிரியர் இளையராஜா இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இளையராஜா கைது செய்யப்பட்டார்.

    மேலும், அந்த வேனில் கிளீன‌ருக்கு பதிலாக விளையாட்டு ஆசிரியர் சென்றது எப்படி? அவர் அடிக்கடி இதுபோன்று வேனில் சென்று வேறு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான ஆசிரியர் தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பள்ளி ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள‌து. இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×