search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை மீட்பு விவாரத்தில் பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்- எச். ராஜா பாராட்டு
    X

    சிலை மீட்பு விவாரத்தில் பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்- எச். ராஜா பாராட்டு

    சிலை மீட்பு விவகாரத்தில் பொன்.மானிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். #hraja #ponmanickavel

    பீளமேடு:

    கோவை பீளமேடு மசக்காளி பாளையத்தில் பாரதீய ஜனதா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பேசியதாவது-

    கும்பாபிஷேகம் நடத்துவது ஆன்மீகம். அதனை இந்து சமய அறநிலைய அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்து கோவில் சொத்து பல இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோடி குறித்து மு.க. ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். கருணாநிதிக்காக பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்திய தலைவர் மோடி. கருணாநிதி சிலையை திறக்க சோனியாவை அழைத்தது ஏன். இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் தமிழின துரோகிகள்.

    சர்ச்சை பேச்சு இருந்தால்தான் அறிவு வளரும். உண்மையை சொன்னால் என்னை தேச விரோதிகள் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். 1 கோடியே 89 லட்சம் பயனாளிகள் முத்ரா திட்டத்தில் பயன் பெற்று உள்ளனர். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் 4.5 லட்சம் வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன.

    வீடு தோறும் கழிப்பறை வசதி நாடு முழுவதும் 7 கோடியே 69 லட்சத்தில் கட்டித்தரப்பட்டுள்ளது. மின் வெட்டு இல்லை என்ற நிலை உருவாக்கியது மத்திய மின் திட்டத்தின் மூலமே தான். பயிர் காப்பீட்டு மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். 300 ரூபாய்க்கு 30 ஆயிரம் வரை பசு மாட்டுக்கு இன்சூரன்ஸ் வழங்கி உள்ளனர். ஆர்.கே. நகர் போல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வி அடையும். பாஜக வில் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். கோவில்களில் முறைப்படி பூஜை பரிகாரங்கள் செய்ய வில்லை எனில் கோவிலை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும்.


    சிலை மீட்பு விவகாரத்தில் பொன்.மானிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மீது புகார் கூற சில அதிகாரிகள் வரிசை கட்டி நிற்கின்றனர். இறுதியில் தர்மமே வெல்லும். தி.மு.க. கூட்டணி தானாகவே உடைந்து போகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கோவை கவுண்டம் பாளையம் தொகுதிக்குட் பட்ட பாரதீய ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஆர்.தாமு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலிவரதன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் வினோ வரவேற்று பேசினார். 

    இதில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, தினமும் 2 மணி நேரம் பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தால் பயன் அடைந்தவர்களை முதலில் சந்தித்து அவர்கள் கருத்துகளை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 435 பூத் கமிட்டி உறுப்பினர்களும் 3 முதல் 4 பேராக சென்று தகவல்களை பரிமாற வேண்டும்.

    உங்கள் பூத் கமிட்டியில் உள்ள பொதுமக்கள் எண்ணங்களை புரிந்து செயல்பட வேண்டும் என பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. கார்வேந்தன், கோட்ட அமைப்பு செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் செங்கை வாசு, மாவட்ட பொதுசெயலாளர்கள் செல்வராஜ், ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். #hraja #ponmanickavel

    Next Story
    ×