என் மலர்
செய்திகள்

ஹெல்மெட் அணியாத விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதார துறை சார்பில் நல வாழ்வு முகாம் நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 100 பேர் ஹெல் மெட் அணியாமல் சென்றுள்ளனர்.
கோர்ட்டு உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் சர்கார் படத்துக்கு எதிராக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மதுரை அண்ணா நகரில் உள்ள தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 22-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது விதிமீறலில் ஈடுபட்டவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று (டிசம்பர் 6) ஒத்தி வைத்தனர்.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேச வலு ஆகியோர் வழக்கின் எதிர் மனுதாரர்களான அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன்செல்லப்பா எம். எல்.ஏ. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டதோடு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #ministervijayabaskar #maduraihighcourt