search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்
    X

    கோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்

    திருமணம் முடிந்ததும் மணமக்களை காரில் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் கோபியில் நடந்த திருமணத்திலோ மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் சரவணபவன். இவரது மகன் கவி அரவிந்த். பட்டதாரி வாலிபர்.

    இதே போல் கோபி அடுத்த எரங்காட்டூரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் பிரவீனா.

    கவிஅரவிந்துக்கும் பிரவீனாவுக்கும் இருவரது வீட்டிலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் படி இவர்களின் திருமணம் இன்று காலை கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நடந்தது.

    திருமணத்தில் இருவரது வீட்டு உறவினர்களும் திரளாக கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் மணமக்களை காரில் அழைத்து செல்வார்கள். ஆனால் இங்கு நடந்த திருமணத்திலோ மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.


    முன்னாள் 2 மாட்டு வண்டிகள் செல்ல அதன் பின்னால் மணமக்கள் சென்ற மாட்டு வண்டி சென்றது.

    அவர்களது பின்னால் மேலும் 10 மாட்டு வண்டிகளில் உறவினர்கள் சென்றனர்.

    கார்கள் புடைசூழ மணமக்கள் செல்லும் இடத்தில் மாட்டு வண்டிகள் மூலம் புடை சூழ மணமக்கள் சென்ற காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

    இது குறித்து மணமக்களின் உறவினர்கள் கூறும் போது, ‘‘நாட்டு மாடுகள் நமது பாரம்பரிய சொத்து இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தான் இந்த ஊர்வலம்’’ என்று கூறினர்.
    Next Story
    ×