என் மலர்
செய்திகள்

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார். #mayilsamyannadurai
கரூர்:
கரூர் க.பரமத்தி சேரன் பொறியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கரூரில் நடந்தது. சேரன் அறக்கட்டளை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, அம்பிகை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 124 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விரும்பியது கிடைப்பதே வெற்றி என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. விருப்பத்திற்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே. நான் பல நேரங்களில் விரும்பாததையும் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்கள் முன்னால் பேசும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். இந்தியாவில் பல வெற்றியாளர்கள் செல்வக்குடியில் பிறந்தவர்களோ, பெரிய கல்வி கூடங்களில் பயின்றவர்களோ கிடையாது. சாதாரண பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.
சாதிக்கும் சந்தர்ப்பங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அயராத உழைப்பும், உயர்ந்த லட்சியமும், தேவையான திறமைகளும் இருந்தால் நிலவுக்கு போகும் கனவு நனவாகும். பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்ற செய்தியை கேள்வி பட்டிருப்போம். அதே நேரத்தில் பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதும் உண்மையாகும். எனவே பணிகளுக்கு தேவையான தகுதியினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் மகுடேஸ்வரன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர் மனோகரன், பொருளாளர் அப்னா தனபதி, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #mayilsamyannadurai
Next Story






