search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 பிளாஸ்டிக் ஆலைகளுக்கு சீல் வைப்பு- அமைச்சர் கந்தசாமி அதிரடி
    X

    2 பிளாஸ்டிக் ஆலைகளுக்கு சீல் வைப்பு- அமைச்சர் கந்தசாமி அதிரடி

    அரசு உத்தரவை மீறி உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வந்த 2 ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏரி, குளம், வாய்க்காலில் பாலித்தீன் பைகள் அடைத்துக்கொள்வதால் தண்ணீர் வெளியேற முடியவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதை கருத்தில்கொண்டு 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படும் என சட்ட சபையில் அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அமைச்சர் கந்தசாமி சென்று ஆய்வு செய்தார். அந்த கடைகளில் 50 மைக்ரானுக்கு கீழ் இருந்த பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று அமைச்சர் கந்தசாமி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார்.

    அப்போது 2 தொழிற்சாலைகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் உடனடியாக அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் 3 தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அந்த தொழிற்சாலை உரிமையாளர்களிடம் 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகளை தயாரித்தால் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

    ஆய்வின்போது அரசு செயலர்கள் பார்த்திபன், ஜவகர், சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையாளர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    பின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது. இதனால் இதை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என உத்தரவிட்டிருந்தோம். இதை மீறி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தேன். இந்த தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வருகின்றனர். 2 ஆலைகளை சீல் வைத்துள்ளோம். அரசு உத்தரவை மீறி பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

    மேலும் பல தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் இயங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துள்ளோம். இந்த குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×