search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான தந்தை- மகள்
    X
    பலியான தந்தை- மகள்

    பொன்னேரி அருகே விபத்து: பிளஸ்-2 மாணவி, தந்தை பலி

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவி மற்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்தவர் காசி (52). பொன்னேரியில் பேக்கரி கடை வைத்து இருந்தார். இவரது மகள் ஆனந்தி (17). வேண்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இன்று காலை காசி வழக்கம்போல் மகள் ஆனந்தியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். எல்.என்.ஜி. கல்லூரிக்கு அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே காசி பலியானார். படுகாயம் அடைந்த ஆனந்தி உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை கைது செய்தனர்.

    விபத்து நடந்த கல்லூரி அருகே வேகத்தடை இல்லை. இதேபோல் மாணவி படிக்கும் பள்ளி அருகேயும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது. மேலும் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நிலக்கரி ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    விபத்தில் தந்தை-மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×