search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பல்லடம் அருகே கிணற்றில் மிதந்த பெண்- 2 குழந்தைகள் பிணம்: போலீசார் விசாரணை

    பல்லடம் அருகே கிணற்றில் பெண், 2 குழந்தைகள் பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை அடுத்துள்ள ஆர்.எம். நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவரது தோட்டத்தில் கிணறு உள்ளது. நேற்று மாலை பொன்னுசாமி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தார்.

    மோட்டாரை இயக்கி விட்டு கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என எட்டிப்பார்த்தார்.

    அப்போது கிணற்றில் ஒரு பெண், 2 குழந்தைகள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பல்லடம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி 3 பேரின் உடலை மீட்க முயன்றனர்.

    அதற்குள் இரவு நேரம் ஆகி விட்டதால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் இரவு 11 மணிக்கு தான் 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பிணமாக கிடந்த பெண்ணுக்கு 45 வயதும், சிறுவனுக்கு 10 வயதும், சிறுமிக்கு 7 வயதும் இருக்கும். இவர்கள் கிணற்றில் விழுந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும். எனவே உடல் சற்று உப்பி போய் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே கிணற்றில் பிணமாக மிதந்த 3 பேரும் வெளியூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

    2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது 3 பேரையும் யாராவது கிணற்றில் தள்ளி கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    பிணமாக கிடந்தவர்கள் குறித்து அடையாளம் தெரிந்தால் தான் இது பற்றிய முழு விவரம் தெரியவரும். எனவே அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த வாரம் பல்லடம் அருகே உள்ள பூமலூரில் 2 குழந்தைகளை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் நடைபெற்றது.

    இந்த சோகம் அடங்குவதற்குள் 2 குழந்தைகளுடன் பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் நடைபெற்றுள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×