search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுடன் பொங்கி வரும் நுரை.
    X
    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுடன் பொங்கி வரும் நுரை.

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுடன் பொங்கி வரும் நுரை - பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சி

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இவற்றின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சாடிவயல் அருகே உள்ள நண்டங்கரை தடுப்பணை நிரம்பி வழிகிறது.

    கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாடி வயல் சின்னாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் உள்ள தரைப்பாலத்தை ஒட்டிய படி வெள்ளம் செல்கிறது.

    நொய்யல் வெள்ளம் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள வெள்ளலூர் அணைக்கட்டு பகுதியை நேற்று கடந்து சென்றது. அணைக்கட்டில் இருந்து ராஜ வாய்க்கால் மூலம் வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் சென்று வருகிறது.

    அணைக்கட்டை தாண்டி வெளியேறும் நீரில் வெண்மை நிறத்தில் நுரை பொங்கியது. காற்று பலமாக வீசிய போது நுரை காற்றில் பறந்து அக்கம் பக்கத்தில் வீடுகள் உள்ள விவசாய தோட்டங்களில் விழுந்தது.

    உடலில் நுரை படும் இடங்களில் அரிப்பு ஏற்படுவதாகவும், சாயக் கழிவுகள் கலக்கப்படுவதாலே ஆற்றில் நுரை பொங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

    நொய்யல் ஆற்று தண்ணீரில் சாயக்கழிவு கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    நொய்யல் ஆற்றை ஒட்டி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அதே பகுதியில் சாய சலவை ஆலையும் உள்ளது. இவற்றின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆற்றில் நீர் வரும் போது நுரை பொங்கி சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 24 குளங்கள் உள்ளது. பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக குமாரசாமி குளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம், உக்குளம் ஆகிய 4 குளங்கள் நிரம்பி விட்டது.

    உக்கடம் பெரிய குளம், புதுக்குளம் ஆகியவை நிரம்பும் நிலையில் உள்ளது. கோலராம்பதி குளத்துக்கு தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளளவில் 75 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    Next Story
    ×