search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam
    தருமபுரி:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



    தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வளத்துறையும், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐவர்பாணி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ள நீர் அதிகமாக கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் கூறியதாவது:-

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர் கண்காணித்து வருகிறார்கள். வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.



    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்க வேண்டாம். பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் இன்று 4-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam

    Next Story
    ×