search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூரில் சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்திருந்த தொழில் அதிபர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்
    X
    குன்னூரில் சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்திருந்த தொழில் அதிபர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்

    சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்த தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ஆவணங்கள் திருட்டு?

    குன்னூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்த தொழில் அதிபர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருட்டு போனதா ? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    குன்னூர்:

    ஊட்டியை சேர்ந்தவர் ராஜன் (55). தொழில் அதிபர். இவர் ஊட்டியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் புளோரிடெக் நிறுவனம் என்ற பெயரில் மலர் சாகுபடி செய்வதற்காக 58 விவசாயிகளின் பெயரில் கடன் பெற்றார்.

    ரூ. 15 கோடி வரை பணம் பெற்று இருந்தார். அதனை திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது கடன் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது.

    அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவக்குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடைபெற்று இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி ஊட்டி, குன்னூரில் உள்ள தொழில் அதிபர் ராஜனுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்தனர். குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி சாலையில் உள்ள ராஜன்வீட்டின் கதவில் இருந்த பூட்டுக்கும் சீல் வைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    இது தொடர்பாக ஊட்டி போலீசிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல் தெரிவித்து சென்றனர். கட்டிடம் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து தொழில் அதிபர் ராஜன் தலைமறைவாகி விட்டார்.

    அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடி வருகிறார்கள். அவர் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலும் மோசடி செய்து இருப்பதாக புகார் எழுந்து உள்ளது. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் குன்னூரில் சீல் வைக்கப்பட்டு இருந்த ராஜனின் வீட்டு கதவு சீல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் ஒட்டி இருந்த நோட்டீசும் கிழிக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்த பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆவணங்களை தொழில் அதிபர் ராஜன் திருடி சென்றாரா? அல்லது வேறு நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியாவிடம் கேட்ட போது, இது குறித்து குன்னூர் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளோம் என்றார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் வைத்த சீல் உடைக்கப்பட்ட சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×