search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்.
    X
    யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்.

    குமரியில் 3.75 லட்சம் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி - மத்திய மந்திரி பொன். ராதா பங்கேற்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுமார் 3.75 லட்சம் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு யோகா பயிற்சி மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகமானது. அதன் பிறகு சர்வதேச யோகா தினம் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்தும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சர்வதேச யோகா தினமான இன்று குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி நடந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள் என 460-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 3¾ லட்சம் பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். பள்ளி, கல்லூரிகளின் வரவேற்பு அறை, விளையாட்டு மைதானம், கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் இப்பயிற்சி நடைபெற்றது.

    நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த யோகா பயிற்சியில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். இதனை ஈஷா யோகா மையத்தினர் நடத்தினர். இதில் ஈஷா யோகா மையத்தின் யோகேந்திரன், கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-



    இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு யோகா பயிற்சியும், அதன் பலனும் உலக நாடுகள் முழுவதும் பரவியது. யோகா மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. இது மனதிற்கும், உடலுக்கும் தெம்பு தரும் பயிற்சி ஆகும். இதனை மேற்கொண்டால் மக்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.

    இந்தியாவில் சித்தர்களும், ரிஷிகளும் மேற்கொண்ட இந்த பயிற்சி இன்று உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட வேண்டுமானால் நாட்டு மக்களின் ஆரோக்கியம் முக்கியம். அதனை யோகா பயிற்சி நமக்கு அளிக்கிறது.

    சிறிய நாடான மொராக்கோவில் சுமார் 36 ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். நாகர்கோவில் நகரை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு. இங்குள்ள மக்கள் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபோல அர்ஜென்டினா நாட்டிலும் மக்கள் யோகா பயிற்சி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். 170 நாடுகளில் யோகா பயிற்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டார். அவருடன் கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், நர்சுகள், பாரா மெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இதில், போலீஸ் அதிகாரிகள், மகளிர் போலீசார் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதனை பிரம்மகுமாரிகள் அமைப்பு செய்திருந்தது. #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    Next Story
    ×