search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடியில் மாமூல் கேட்ட தகராறில் ரவுடி குத்தி கொலை - 8 வாலிபர்கள் கைது
    X

    வியாசர்பாடியில் மாமூல் கேட்ட தகராறில் ரவுடி குத்தி கொலை - 8 வாலிபர்கள் கைது

    வியாசர்பாடியில் ரவுடி கொலை வழக்கில் 8 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் பரத் என்கிற தக்காளி பரத் (வயது 38). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், செம்பியம், திரு.வி.க. நகர் போன்ற போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி, திருட்டு வழக்குகள் உள்ளன. ரவுடி மாமூலும் கேட்டு பலருக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    அந்த பகுதியில் லாரியில் தண்ணீர் விற்பனை செய்யும் விகாஸ் (20) என்பவரிடம் மாமூல் கேட்டு ரவுடி தக்காளி பரத் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் விகாசை தனது வீட்டுக்கு தக்காளி பரத் அழைத்து மதுபாட்டில் வாங்கித் தருமாறு கூறினார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று விகாஸ் மறுத்தார். இதனால் அவரை தக்காளி பரத் சரமாரியாக தாக்கினார்.

    இது தொடர்பாக விகாஸ் செம்பியம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து தக்காளி பரத்தை கைது செய்தார். ஜெயிலில் அடைக்கப்பட்ட தக்காளி பரத் கடந்த 15-ந் தேதி வெளியே வந்தார். அவரை கொலை செய்ய விகாசும், அவரது நண்பர்கள் 7 பேரும் திட்டமிட்டனர்.

    இதை அறிந்த தக்காளி பரத் தனது வீட்டுக்கு செல்லாமல் மறைவான இடத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தக்காளி பரத் வீட்டுக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு அவர் கக்கன்ஜி காலனியில் உள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது விகாசும், அவரது நண்பர்கள் பார்த்திபன், லோகேஸ்வரன், கணேசன், வசந்தகுமார், நிர்மல்குமார், தேவராஜ், தீபக்குமார் ஆகியோரும் தக்காளி பரத்தை கத்தியால் குத்தினார்கள். 12 இடங்களில் கத்திக் குத்துப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே 8 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தக்காளி பரத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தக்காளி பரத் இன்று அதிகாலை இறந்தார்.

    இது தொடர்பாக செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில் கொலையாளிகள் பெரியபாளையத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெரியபாளையம் சென்று 8 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×