search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டு
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டு

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. #nipahvirus
    கோவை:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.



    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் காய்ச்சல் என்பது நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் மனிதனுக்கு பரவுகிறது. இந்த காய்ச்சல் 1998-ம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள நிபா என்ற பகுதியில் இருந்து பரவியதால் நிபா என்று அழைக்கப்படுகிறது.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வாலின் எச்சம், சீறுநீர் மூலமும் பன்றிகள் மூலமும் மனிதனுக்கு பரவுகிறது. டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை போல இந்த காய்ச்சல் வேகமாக பரவாது.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்ட வவ்வாலின் எச்சம், சீறுநீர் மனிதனின் உடலில் படும்போது இது பரவுவது இல்லை. மாறாக வவ்வாலின் எச்சம் மற்றும் சீறுநீர் உணவு பொருள் மற்றும் தண்ணீர் மீது படும்போது அதனை மனிதன் தெரியாமல் சாப்பிடுவதால் பரவுகிறது. எனவே பொது மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம்.

    நிபா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அளவுக்கு அதிகமான வெப்பம், மற்றும் கடுமையான தலைவலி ஏற்படும். பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையை பாதித்து மரணம் ஏற்படும்.

    இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். நிபா வைரசுக்கு மருந்து இல்லாததால் ஆரம்ப கால கட்டத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது டாக்டர்கள் காய்ச்சலை கட்டுபடுத்த மருந்து கொடுப்பார்கள். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குணம்பெறலாம்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு அமைக்கப்பட்டுள்ளதை போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணிக்க டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே நிபா வைரஸ் பாதிப்பு உள்ளவர் சிகிச்சை பெற்று குணம்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nipahvirus


    Next Story
    ×