search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் வணிகர் சங்க பேரவை மாநாட்டில் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா பங்கேற்பு
    X

    காஞ்சீபுரத்தில் வணிகர் சங்க பேரவை மாநாட்டில் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா பங்கேற்பு

    வெள்ளையன் தலைமையில் காஞ்சீபுரத்தில் வணிகர் சங்க பேரவை மாநாடு இன்று தொடங்கியது. இதில் யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா பங்கேற்றனர். #vanigarsangam #vellaiyan

    சென்னை:

    காஞ்சீபுரத்தில் த.வெள்ளையன் தலைமையில் நடந்த வணிகர் சங்க பேரவை மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் குவிந்தனர். மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா பங்கேற்றனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தினவிழா கொண்டாடப்படுகிறது.

    35-வது வணிகர் தினவிழா வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்பு மாநாடு காஞ்சீபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகம் வெள்ளகேட் அருகில் இன்று (5-ந் தேதி) காலை 9 மணிக்கு நடந்தது. மாநாட்டுக்கு மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ் வரவேற்றார்.

    மாநாட்டில், அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, வர்த்தக சங்க பொதுச் செயலாளர் விஜய் பிரகாஷ் ஜெயின், உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், பொதுவுடமை இயக்க தலைவர் இரா.நல்லக்கண்ணு.

    வங்கி ஊழியர் சம்மேளனம் சி.பி.கிருஷ்ணன், விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் இரா.லெனின், சட்ட ஆலோசகர் வக்கீல் கே.பாலு, திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழ்த் தேசிய பேரியக்கம் பெ.மணியரசன், புதுச்சேரி வர்த்தக சங்க தலைவர் எம்.கே.ராமன், தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் மாநில செயலாளர் சி.கே.மதிவாணன், பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜி.சங்கரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.

    மாநாட்டில் கூடங்குளம் சுப.உதயகுமார், தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் தலைமையில் என்ன செய்யப்போகிறோம்... நாம்? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக காலை 9 மணிக்கு மாநாட்டு பந்தலில் காஞ்சீபுரம் எம்.கோபால் நாயக்கர் தேசிய கொடி ஏற்றினார். ஆர்.நாராயணன் செட்டியார் வணிகக் கொடி ஏற்றினார். மாநாட்டு பந்தலை பல்லவன் பொறியியல் கல்லூரி தாளாளர் பா.போஸ் திறந்து வைத்தார். தங்கம் வெள்ளையன், ஸ்ரீதேவி ராமகிருஷ்ணன், நர்மதா சம்பத், செல்வி விஸ்வநாதன், ஜெயராணி ராஜகோபால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

    மாநாட்டில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ப.தேவராஜ், காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் எம்.ராமகிருஷ்ணன், வியாசை மணி, மணலி டி.ஏ.சண்முகம், எச்.ஹாரூண் ரஷித், ஜி.அரிகிருஷ்ணன், மீஞ்சூர் டி.ஷேக் அகமது, பி.தனசேகரன், எஸ்.ஆர்.பி. ராஜன், தங்கதுரை, பெரம்பூர் ரெங்கசாமி நாடார், ஓட்டேரி ஜோதிராம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் த.வெள்ளையன் பேசியதாவது:-

    உலக வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டுக்கு கேடு ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய வணிகம், விவசாயம், அழிந்து வருகிறது. அந்நிய ஆதிக்கத்தால் சுய தொழில்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நாட்டின் அனைத்து துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் வலுப் பெற்றுள்ளது. ஆட்சியாளர்களின் உறுதுணை இருப்பதால் நமது தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டு தொழில் சுதந்திரத்தை இழக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலை தொடருமானால் அந்நிய சக்திகளின் ‘கை’ மேலோங்கும் அது நம் நாட்டின் தற்சார்பு பொருளாதாரத்தை வீழ்த்தி அந்நிய பொருளாதாரத்தை புதை குழியில் சிக்க வைத்து விடும். இறுதியில் நம் நாட்டின் சுதந்திரத்தை நாம் இழக்க நேரிடும்.

    வணிகர்கள், விவசாயிகள், சுயதொழில் புரிவோர், ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் 35-வது வணிகர் தின விழா மாநில மாநாடு வணிகம், விவசாயம் மற்றும் சுய தொழில்கள் மீட்பு மாநாடாக நடைபெற்று வருகிறது.

    நம் நாட்டு சில்லரை வணிகத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்றே ஆன்லைன் வணிகத்தை அனுமதித்து உள்ளனர். நமது ஆட்சியாளர்கள் அந்நியரின் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். நாட்டையும், நம்மையும் அழிவுப்பாதைக்கு அவர்கள் கொண்டு செல்கிறார்கள்.

    மக்கள் பாதிக்கப்படுவதையும், மக்களின் சுயதொழில்கள் அந்நியரின் கைகளில் சிக்கி கொள்வதையும், பொதுத் துறைகள் அந்நியரின் ஆதிக்கத்துக்குள் செல்வதையும் தடுக்க வணிகர்கள் ஓரணியில் திரள வேண்டும்.

    இவ்வாறு த.வெள்ளையன் பேசினார். #vanigarsangam #vellaiyan

    Next Story
    ×