என் மலர்
செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்
ஈரோடு:
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு நேற்றுடன் பள்ளிக் காலம் நிறைவு பெற்றது. இந்த நாளை நிறைவு செய்து மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.
அப்போது ஒருவர் மீது ஒருவர் மையை எரிந்தும் கலர் பொடிகளை (ஜிகினா) முகத்தில் பூசியும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இப்படி மாணவர்கள் ‘குஷி’யுடன் விடுமுறையை கொண்டாடப் போகும் சமயத்தில் மேலும் மாணவர்களை மேலும் குஷிப்படுத்த ஒவ்வொரு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நினைவு பரிசுகளை கொடுத்தனர்.
இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி நாளையொட்டி அந்தப் பள்ளி ஆசிரியர்களே அசைவ விருந்து கொடுத்து அசத்தி விட்டார்கள்.
நேற்று மதியம் பள்ளியில் நடந்த இந்த விருந்தில் மாணவ- மாணவிகளுக்கு நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி வறுவல், முட்டையுடன் சாப்பாடு பரிமாறப்பட்டது.
ஆசிரியர்-ஆசிரியைகளே மாணவ-மாணவிகளுக்கு இந்த அசைவ விருந்தை பரிமாறினார்கள்.
இந்த அசைவ உணவை பள்ளியில் ஆசிரியர்- ஆசிரியைகளே சமைத்தது குறிப்பிடத்தக்கது. அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் பலர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வாய்க்கு ருசியாக அசைவ விருந்தை ஆசிரியர்கள் வழங்கியது அந்த கிராம மக்களை ஆச்சரியப்பட வைத்ததோடு ஆசிரியர்களையும் பாராட்டினர். #tamilnews






