search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதி ஆகிறார் விஜயேந்திரர்
    X

    காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதி ஆகிறார் விஜயேந்திரர்

    காஞ்சீபுரம் சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக ஓரிரு நாட்களில் விஜயேந்திரர் பதவி ஏற்க உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    2,520 வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சீபுரம் சங்கரமடத்தின் 69-வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அன்னாரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து அடுத்த மடாதிபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. ஜெயேந்திரர் மரணம் அடைந்தது குறித்து உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சங்கர மட நிர்வாகிகள் தெரிவித்தனர். மடத்திற்கு மடாதிபதி இல்லாமல் இருக்கக்கூடாது. 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் அடுத்த மடாதிபதி அறிவிக்கப்பட வேண்டும் என்பது மரபு.

    ஜெயேந்திரர் இறந்ததையடுத்து இளைய மடாதிபதி விஜயேந்திரர் சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அவர் புதிய மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து விஜயேந்திரரின் கைரேகைகள் பதியப்பட்டு சங்கர மடத்தின் பொறுப்பாளர்கள் இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பி உள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் புதிய மடாதிபதியாக விஜயேந்திரர் பதவி ஏற்பார் என்று சங்கர மட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    புதிய மடாதிபதியாக பதவி ஏற்க உள்ள விஜயேந்திரருக்கு தற்போது 49 வயதாகிறது. இவரது இயற்பெயர் சங்கரநாராயணன். திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் பிறந்தவர். கடந்த 1983-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி தனது 14-வது வயதில் சங்கரமடத்திற்கு வந்தார்.

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில் 2005-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

    சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்கவில்லை. அவர் தமிழ் மொழியை அவமதித்து விட்டார் என சர்ச்சை கிளம்பியதால் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.  #tamilnews
    Next Story
    ×