என் மலர்
செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மறுப்பு: ஜெயேந்திரருக்கு உடல்நலக்குறைவு
காஞ்சீபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 83). இவர் காஞ்சீபுரம் சாலைத்தெருவில் உள்ள சங்கர மடத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.
நேற்று காலை 11 மணியளவில் ஜெயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது நிறுத்தப்பட்டது. தனி அறையில் ஜெயேந்திரர் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மீண்டும் அவருக்கு உல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக ஜெயேந்திரரை போரூரில் உள்ள ராமச் சந்திரா ஆஸ்பத்திரிக்கு மட நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் வேன் நின்றதும் அதில் இருந்து இறங்க ஜெயேந்திரர் மறுத்து விட்டார். உடல் நலம் சரியாகி விட்டது. சிகிச்சை வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்வது அறியாமல் திகைத்த உடன் வந்த மடம் நிர்வாகிகள் அங்கிருந்து சென்னை, சேத்துப்பட்டில் உள்ள சங்கர மடத்துக்கு சொந்தமான சங்கராலயா மடத்துக்கு வந்தனர். அங்கு ஜெயேந்திரர் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் மார்கழி மாதம் முழுவதும் தினமும் அதிகாலை 3 மணியளவில் எழுந்து சிறப்பு வழிபாடு செய்து வந்து உள்ளார். டாக்டர்கள் வந்து அவரை பரிசோதனை செய்து தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
உடல் நிலை சீரானதையொட்டி இன்று காலை ஜெயேந்திரர் காஞ்சீபுரம் மடத்துக்கு திரும்புவார் என்றும், அங்கு வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும் மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர். #tamilnews #JayendraSaraswati






