search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2000 ரூபாய் நோட்டுக்கு ஆயுள் 2 நாள்: கோவில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    2000 ரூபாய் நோட்டுக்கு ஆயுள் 2 நாள்: கோவில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
    • காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன.

    கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

    ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன. இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.

    காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பே உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 2 நாட்களில் மாற்றியாக வேண்டும் என்பதால் அங்குள்ள உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமக் கோவில்கள் மற்றும் சமுதாயத்துக்கு பாத்தியப்படட குலதெய்வக் கோவில்களிலும் உண்டியல்கள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    Next Story
    ×