search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவையாறில் 176-வது ஆராதனை விழா: சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்பு

    • கவர்னருக்கு சபா சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • 700-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதனை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இசை கலைஞர்கள் பாடல்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வந்தனர்.

    விழாவில் கடைசி நாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்பம் பகுள பஞ்சமி நாளை முன்னிட்டு காலை 5 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் புல்லாங்குழல் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும், மேளதாளங்கள் முழங்கவும் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் விழா தொடங்கியது.

    முன்னதாக, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என். ரவி காலை 7.45 மணிக்கு விழாவை தொடங்கி வைத்தார். அவருக்கு சபா சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தியாகராஜர் சுவாமிகளை வழிப்பட்டு தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் விழா மேடையில் பேசினார். இசை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார்.

    இதில் தியாகபிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே. வாசன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து 9 மணிக்கு பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது.

    இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசிராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட 700-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று மாலை திருமெஞ்ஞானம் மீனாட்சிசுந்தரம், மன்னார்குடி வாசுதேவன் ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது.

    தஞ்சைக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு அவர் வந்து சென்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×