search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கோப்பை கால்பந்து எதிரொலி- நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி 4 கோடியாக அதிகரிப்பு
    X

    உலக கோப்பை கால்பந்து எதிரொலி- நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி 4 கோடியாக அதிகரிப்பு

    • சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடங்காக உயர்த்தி விட்டது.

    நாமக்கல்:

    இந்திய அளவில் முட்டைகள் அதிகம் உற்பத்தியாகும் மண்டலமாக நாமக்கல் உள்ளது. இங்கு ஆயிரத்து நூறு கோழி பண்ணைகள் மூலம் நாள்தோறும் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சத்துணவு திட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து 80 சதவீத முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

    சவுதி அரேபியா, ஈரான், ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தாருக்கு மட்டும் மாதம் 1.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கத்தார் நாட்டில் கடந்த 20-ம் தேதி தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த மாதம் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க சுமார் 32 நாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் முகாமிட்டுள்ளனர் .இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக துருக்கி, உக்கரைன் நாடுகளில் இருந்து கத்தாருக்கு முட்டை விற்பனைக்கு வரும். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் முட்டை கொள்முதல் தடைப்பட்டுள்ளது .

    இந்த நிலையில் துருக்கி நாட்டில் முட்டை விலையை இருமடமாக உயர்த்தி விட்டது. இதனால் நாமக்கல் மண்டலத்திலிருந்து முட்டைகள் கொள்முதல் செய்யும் பணியை கத்தார் மற்றும் பிற அரபிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மாதம் 1.50 கோடி முட்டைகள் என்ற நிலையானது தற்போது மாறி 4 கோடியாக அதிகரித்துள்ளது.

    கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் முடங்கி கிடந்த கோழி பண்ணையாளர்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதியாளரும் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி பண்ணை உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    2010, 2018-ம் ஆண்டு வரையில் ஏற்றுமதியானது மிகவும் நலிவடைந்து இருந்தது. மொத்தமாகவே மாதத்தில் 1.50 கோடி முட்டைகள் தான் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின .தற்போது கத்தாரில் நடைபெறும் உலக கோப்பையால் அங்கு முட்டையின் தேவை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சென்று கொண்டிருந்த 50 லட்சம் முட்டைகள் என்பது 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதர அரபு நாடுகளுக்கு 2.50 கோடி முட்டைகள் அனுப்பப்படுகின்றன. தினசரி 3 கண்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கால்பந்து போட்டிகள் முடிவடையும் வரையில் ஏற்றுமதி அதிகரித்து காணப்படும் .அதன்பிறகு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. முட்டை ஏற்றுமதி மானியம் 7 சதவீ தத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைந்து விட்டது. இதனை மீண்டும் 7 சதவீதமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்படி சூழல் ஏற்பட்டால் முட்டை ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×