என் மலர்
விளையாட்டு

உலக கோப்பை செஸ் போட்டி: பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியலுடன் மோதல்
- 11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
- நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
பனாஜி:
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம் பெற்றனர். 2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தியான் கோஷ் ஆகிய 5 வீரர்களும் 3-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.
இன்று ஓய்வு நாளாகும். 4-வது சுற்று ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் ஆட்டமும், 12-ந்தேதி 2-வது ஆட்டமும், தேவைப்பட்டால் 13-ந்தேதி டை பிரேக்கரும் நடைபெறும். இந்த சுற்றில் மொத்தம் 32 வீரர்கள் ஆடுவார்கள்.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியல் டுபோவுடன் மோதுகிறார். அர்ஜூன் எரிகைசி அங்கேரியை சேர்ந்த பீட்டர் லிகோவை சந்திக்கிறார்.
பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீடனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகுவாங்குடனும் மோதுகிறார்கள்.






