என் மலர்
விளையாட்டு

மெஸ்ஸியிடம் கை கொடுக்க ஒரு கோடியா? வெளியான அதிர்ச்சி தகவல்
- 2-வது நாள் பயணமாக மெஸ்ஸி நேற்று மும்பை சென்றார்.
- 3-வது நாள் சுற்றுப்பயணமாக மெஸ்ஸி இன்று டெல்லி சென்றுள்ளார்.
புதுடெல்லி:
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார். அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.
அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.
இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர். மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.
இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மெஸ்ஸி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் அவரிடம் கை கொடுக்க ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் கொல்கத்தாவின் நிகழ்ச்சியில் இதற்கு ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்திருந்த நிலையில், ரசிகர்கள் அவரை காண முடியாமல் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.






