என் மலர்
கிரிக்கெட் (Cricket)

U19 உலகக் கோப்பை: ஆரோன் ஜார்ஜ் அபார சதம்- ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியா
- ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருவர் சதம் அடித்தனர்.
- இந்த அணி சார்பில் இரு வீரர்கள் அரைசதமும், ஒரு வீரர் சதமும் விளாசினர்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேயின் ஹராரேவில் இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பைசல் ஷினோசடா 93 பந்தில் 110 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரர் உஜைருல்லா நியாஜாய் ஆட்டமிழக்காமல் 86 பந்தில் 101 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 311 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் களம் இறங்கியது. ஆரோன் ஜார்ஜ்- வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 33 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 90 ரன்கள் சேர்த்தது.
அடுத்து கேப்டன் ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். இவர் 59 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் ஜார்ஜ் அபாரமாக விளையாடி 95 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 104 பந்தில் 115 ரன்கள் சேர்த்தார். விஹான் மல்ஹோத்ரா 47 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் வருகிற 6-ந்தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியும் ஹாராரேயில் நடக்கிறது.






