என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நாளை ஸ்மிருதி மந்தனா திருமணம்: மணப்பெண் தோழிகளாக மாறிய ஜெமிமா, ஷ்ரேயங்கா
- ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள்.
- ஸ்மிருதி மந்தனா நாளை (23-ந்தேதி) தனது காதலனை கரம் பிடிக்கிறார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா நாளை (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் வட இந்திய பாரம்பரியமான திருமணத்துக்கு முந்தைய ஹல்தி நிகழ்ச்சி நேற்று மாலை ஸ்மிருதி மந்தனாவின் வீட்டில் நடைபெற்றது.
இதில் சக வீராங்கனைகள் ரிச்சா கோஷ் , ஷ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங் , ஷிவாலி ஷிண்டே ,ஷபாலி வர்மா, ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் மணப்பெண் தோழிகள் போல உடையணிந்துள்ள புகைப்படங்களை ஜெமிமா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.






