என் மலர்
கிரிக்கெட் (Cricket)

யாரும் இங்கே தர்மம் செய்ய வரவில்லை- சர்ச்சைக்குரிய அவுட் குறித்து லிட்டன் தாஸ் ஆவேசம்
- ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.
- விதிகளின்படி அவுட் என்றால் அது அவுட் தான் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. முதல் போட்டியில் வங்கதேசம் எளிதாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியின் போது சல்மான் ஆகா ரன் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வங்கதேச வீரர் மிராஸ் ஓவரில் ரிஸ்வான் பந்தை தடுத்து ஆடுவார். அப்போது பந்து மிராஸை நோக்கி வந்தது. அப்போது எதிர்முனையில் இருந்த சல்மான் ஆகாவும் மிராஸும் மோதிக் கொள்வது போன்ற நிலை ஏற்பட்டது. இதனால் சல்மான் ஆகாவும் மிராஸும் கிரீஸ்க்கு வெளியில் அப்படியே நின்று விடுவார்கள். உடனே சல்மான் ஆகா பந்தை எடுத்து மிராஸிடம் கொடுப்பதற்காக கீழே குனிந்து பந்தை எடுக்க முயன்றார். அதற்குள் மிராஸ் பந்தை எடுத்து ரன்அவுட் செய்துவிடுவார். இதனால் சல்மான் ஆகா முகுந்த கோபத்துடன் வெளியேறுவார். இந்த ரன்அவுட் சர்ச்சையை எழுப்பியது.
இது விளையாட்டுத் தர்மத்திற்கு மாறானது என ஒரு தரப்பினர் விமர்சித்த நிலையில் யாரும் இங்கே தர்மம் செய்ய வரவில்லை என வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.
இது குறித்து லிட்டன் தாஸ் கூறியதாவது:-
முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள், யாரும் இங்கே தர்மம் செய்ய வரவில்லை. இது ஒரு சர்வதேசப் போட்டி. அந்த ஆட்டமிழப்பு கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே இருந்தது என்பதால், எந்தக் கோணத்திலும் விளையாட்டுத் தர்மம் மீறப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஒரு வீரராக, விதிகளின்படி அவுட் என்றால் அது அவுட் தான் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
என அவர் கூறினார்.






