என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வங்கதேசத்துக்கு எதிராக தொடரை வெல்லுமா இந்தியா? நாளை 2-வது டி20 போட்டி
- இரு அணிகளும் நாளை மோதுவது 16-வது டி20 ஆட்டமாகும்.
- இதுவரை நடைபெற்ற 15 போட்டியில் இந்தியா 14-ல், வங்கதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன.
புதுடெல்லி:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் குவாலியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. முதல் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம்பலத்துடன் திகழ்கிறது. குவாலியர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கிலும், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.
நாளைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. 11 பேர் கொண்ட அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களுக்கு (வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்) வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதே நிலை நாளையும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். ஏற்கனவே அந்த அணி டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயமான இந்தப் போட்டியில் வங்கதேச வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இரு அணிகளும் நாளை மோதுவது 16-வது டி20 ஆட்டமாகும். இதுவரை நடைபெற்ற 15 போட்டியில் இந்தியா 14-ல், வங்கதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






